உலகியல் சொல்வேன் !
[THE WAY OF THE WORLD ]
&
டும்..டும்..டும்டும்டும்டும் ....!
இதனால் சகல ஜனங்களுக்கும் பறை அறைந்து
அறிவிப்பது என்னவென்றால் .....!
&
இதோ அறிவீர்--
இனிய வார்த்தைகளால் என் உதடுகள்
அழகுற உமைப் புகழ்ந்து பூக்கையில்
இதயத்தின் ஆழ்ந்த இருட்டு இடுக்குகளில்
அவற்றின் வேர்கள்
அழுகிய சேற்றில் நாறும் அவலங்களில்
உமைப் புரட்டி எடுக்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
ஏதோ ஒன்றை எதிர்த்து
கூரிய தர்க்கக் கணைகளைக்
கருணையின்றிப் பொழிகையில்
அதனையே என் நெஞ்சுள்
மலர் சொரிந்து பாதம் பணிந்து
அனைத்து மரியாதைகளுடன் வரவேற்கிறேன்
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் நாவும் இதயமும்
எந்நேரமும் எதிரும் புதிருமாய் --
எனவேதான் சொல்கிறேன் -
ஓயாது வித்தை காட்டும் என் நாவினைச் சாதுர்யமாய்க் கடந்து
உன் செவிக்கலத்தை என் இதயத்துள் இட்டுச் செல் -
அதன் புதிரான மொழிகளைக் கேள் .
&
பெண்பற்றி மிக இழிவாய்
நான் உரக்கப் பறை கொட்டுகையில்
என் திருட்டுப் பார்வைகள் காமத் தகிப்பில்
ஓய்வின்றிப் பெண் நிழலைத் தேடித் தவிக்கின்றது -
&
மனம் நெகிழும் மொழிகளில்
பெண் இழிபடுதலை முடித்திட
உலகிற்கு முனைந்து போதிக்கையில்--
அதுவே என் கனல் கண்களுக்கு
ஆர்ப்பாட்டமான அறுசுவை விருந்து
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
இரு துருவங்கள் என் இதயமும் நாவும் --
எனவே என்னுள் மூழ்கிப்
புதைத்த எண்ணங்களைத்
தோண்டிப் பறித்துக் கொள்வீர் -
&
வாழ்விற்கு முற்றுப் புள்ளி வைக்க
உறுதியாய்த் திட்டமிடுகையில்-
வாழ்வின் நைந்த ஆசை வேர்ப் பிசிறுகள்
ஏமாற்ற மலட்டு முகடுகளிலும்
ஈர நம்பிக்கை இழைகளைக் கண்டு மாறிவிடுகிறது
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் சிரிப்பின் வெடி முழக்கங்கள்
திக்கெங்கும் வானில்
ஆர்ப்பரித்துப் புரளுகையில் -
என் விம்மல் பேரலைகள் உள்ளிருந்து
இதயக் கரைகளில் முட்டி மோதி
நெஞ்சில் அறைந்து கொள்கின்றன
என்பதைத் தெளிவுறுங்கள் --
&
என் முகமேடை தோன்றும் உணர்ச்சி நாடகங்களை
உலகீர் ..நம்பாதீர் !
புதைத்த இதயத்தின் ஒளித்த மொழிகளுக்கு
உமது செவியை ஓட்டிச் செல்வீர் !
பறை சாற்றி விட்டேன் ;
பின் எனைக் குறை காணாதீர் !
டும்..டும்.டும்டும் ..டும்டும் !
&
சந்திர கலாதர்
No comments:
Post a Comment