மனித நேயப் போர்வைகள்
&
" சமுதாய விழியற்ற
மனித உருக்கமற்ற
எழுத்துக்களும் கவிதைகளா ? "--
இப்படிக் கொக்கரித்தல்
இன்றைய வா[வே]டிக்கை !
&
இரண்டு கவிதைகளில்
கண்ணீர் பாய்ச்சிவிட்டால்
கனல் கக்கி விட்டால்
' மானுடக் காவலன் ' எனத் தானே
மகுடம் சூட்டிக் கொள்ளும்
'வேடம் 'தாங்கல்களின்
வெற்றுப் பிதற்றல் இது !
&
சிரிப்புத்தான் வருகிறது --
இவர்கள் எழுத்துக்கள்
எத்தனை சத்தியம் ?
&
ஏ !சொல் வீரர்களே !
உங்கள் மலட்டுச் செடிகளில்
செயல் மொட்டுக்கள்
என்றேனும் முகிழ்த்ததுண்டா ?
&
ஓ ! உபதேசிகளே !
வார்த்தை வணிகர்களே !
' சமுதாயச் சிற்பி ' பட்டங்கள்தானே
தாளாத தாகங்கள் ?
&
கவிதைத் தூரிகையால்
விதவையின் நெற்றியில்
'திலக' நிலவு தீட்டிட
வற்றாத ஆசை பலர்க்கு !
எழுத்து உலர்வதற்குள்
' புரட்சி மாவீரன் 'எனத் தாமே
பூரித்துப் போகும் புரட்டர்கள் !
பேனாதானே --
உள்ளிருப்பதும் இதயப் பொய்'மை'தானே !
&
ஒன்று கேட்பேன் --
ஊர் அறிய சட்டம் சாட்சி நிற்க
விதவைக்கு நெற்றித் திலகமிட
நெஞ்சில் உமக்கு வலிவுண்டோ?
அன்றி உம் மைந்தற்கு
விதவைகளை மணம் முடிக்க
இதயத் தூய்மைதான் உண்டா ?
&
இது நிகழின் இவர் பெயரைப்
பொன் வரிகளில் வடிப்பேன் --
அன்றி கவிதைக் கனலாலே
சுட்டுப் பொசுக்குவேன் !
&
ஜாதி இல்லை எனத் தான் எழுதியதுமே
பாரதி எனும் கனவில் முண்டாசு தேடி
உரத்துக் கத்தும் வறட்டுத் தவளைகாள்--
பாரதி வாழ்ந்தபின்தான் சொல்லானான் !
அவன் வாழ்க்கைச் சரிதம்
அகல நடந்தால் தனியே
அவன் ஆழ உழுத வழி
விழிமுன் விரிந்து
அவன் மீசைக்குப் பொருள் சொல்லும் !
&
சேரி தாழ்த்தப்பட்டோர் எனப்
பொய்ப்புயல்கள் உருட்டுவோரே !
ஓட்டை குடிசையின்
ஏழை மங்கை ஒருத்திக்கு
விளம்பர ஊளைகள் இன்றி
சட்டம் கோலோச்ச
உண்மை மணவாழ்வு
எவர் உம்மில் தருவார் ?
&
வரதட்சணைக் கொடுமையை
வகை வகையாய் எழுதி அழுவோரே --
நெஞ்சில் கை வைப்பீர் --
மின்னும் பொன் இன்றி
வரிசைகள் வாராது
நங்கை நல்லாளை
இல்லம் வந்திடுக எனச்
செயலிற் சிறந்தவர் உம்மில் யார் ?
&
ஒன்றா ? இரண்டா ?
இவர் பாடும் மனித நேயங்கள் !
போர்த்திடும் போர்வைகள் -
சுழற்றும் அட்டைக் கத்திகள் !
வார்த்தை தாசர்களே !
சொற் பந்து தீரரே !
செயற் போட்டியில்
என்று முன் நிற்பீர் ?
&
செயலற்ற வீணரின்
வார்த்தை நரிகளை
என் கர்ஜனை கொன்றுவிடும் --
கயமைக் குருதி குடித்து
கோபம் தணித்திட என் கவிதை
புலியெனப் பாய்ந்து வரும் !
&
தகுதிகள் இன்றிப் பாடுவோர் தம்மால்
இத்தாரணி தாழ்ந்ததம்மா !
மானுடம் மடிந்ததம்மா --
இந்த மண்ணிடைக் காளான்கள்
மக்கி மடிந்திட எரிதழல் சூரியன் ஆகிடுவோம் !
&
சம தர்மங்களில் சொத்துக் குவிப்போனும்
ஒளி வெள்ளத்தில் ஊறித்
' தொண்டை ' வஞ்சிப்பானும்
நாளிதழ் நடுவே பொய்முகம் தாங்கிப்
போதனை செய்வோனும்
ஆன்மத் தூய்மை இற்று
'பிண' எழுத்துக் கோர்ப்பானும்
அறவே ஒழிந்தாலே
'மானுடம் 'மலர்ந்துவிடும்!
&
நோய்க் கொசுக்கள் பொங்கிடப் பறந்திடும்
நாற்றப் பன்றியும் இம்மன ஊனரைக் காட்டிலும்
வெகு மேன்மை என்று உரைப்பேன்
&
முதலில் மௌனச் செயலாவீர் --
செயல் நடக்கும் போதினில்
வார்த்தைப் 'பாடை'களின்
ஊர்வலங்கள் தேவை இல்லை --
உண்மையின் பாதம் பூமியில் படுகையில்
எம்மொழிக்குமே அங்கு வேலையில்லை !
&
கவிதை என்பது
ஓர் வழிப் பாதை அல்லவே --
மானுடத்தோடு விண்ணையும் மண்ணையும்
இயற்கையின் படைப்பு அனைத்தையும்
அள்ளி அணைத்துத் துள்ளிப் பாடி
வண்ணப் பொழிவில் நீந்தித் திளைத்து
அற்பம் என்று எதனையும் கருதாது
ஒவ்வொன்றின் உன்னதம் உரக்கக் கூறி
உணர்வில் பறப்பது கவிதைச் சிறகு --
ஒளியைப் பிளந்தாலோ ஏழு நிறங்கள் ;
உலகைப் பார்த்தாலோ எண்ணிலாச் சுவைகள் --
வகை வகை அற்ற பாதைகள் இன்றேல்
ஓர் நிறம் கொண்ட மொட்டை வெளியாய்
வாழ்வே சோர்வாய் முடங்கிடும் அன்றோ?
கவிதை எனும் ' காமிரா ' கொண்டு
இயற்கையை எங்கும் என் காதலில் நாடி
சுவைத் தேனாய் படைத்திடுவேன் !
&
------சந்திர கலாதர்
No comments:
Post a Comment