ஒரு தீபாவளி நொடிகள்
[என் அம்மா எனை அழைத்த பெயர் சந்திர மௌளி ..அதனால் அந்தத் தொகுப்பில் ]
&
அந்தக் காலத்து அம்மாக்களை எண்ணிப் பார்க்கிறேன்
அவர்களுக்கு தீபாவளிக்கு முந்தைய இரவே தலைகீழ் எண்ணல் [ count down ] துவங்கி விடும் .
இரவெல்லாம் அடுப்படியில் வேலை
நள்ளிரவு வரை நீடிக்கும்
' ஒக்காரை ' [ திருநெல்வேலி ஸ்பெஷல் ] பெரிய அண்டாவில் கைவலிக்க வலிக்க
பதம் பார்த்து களி போல ஆகாமலும் புழுதி போலப் போய்விடாமலும் பக்குவமாய்க் கண்கொத்திப் பாம்பாய்க்
கிண்டிட வேண்டும்
இஞ்சி லேகியம் வேறு செய்ய வேண்டும் .
அப்போது ஏது பளீர் விளக்குகள் , மொசைக் சுவர்கள் ?
பின் மறுநாள் அதிகாலை எல்லோர்க்கும் புதிதாக வாங்கிய துணிகளை இணை இணையாக தட்டில் சாமி முன் எடுத்து வைக்க வேண்டும் .
குத்து விளக்குகள் தேய்க்க வேண்டும் .
நாளை கங்கா ஸ்நானத்திற்கு நல்லெண்ணெய் இஞ்சி மிளகாய் போட்டுக் காய்ச்ச வேண்டும் .
சீயக்காய் எடுத்து வைக்க வேண்டும் .
அடுப்பு மெழுகித் தயாராக இருத்தல் வேண்டும் .
பெண்கள் தலைக்குப் பூக்கள் ..
இத்யாதி இத்யாதி ...
பின் தூக்கம்போல விழிப்பாய் ஓரிரு மணிகள் பாயில் புரள்தல் -
பின் அதி அதி காலை மூன்று மணிக்கு எழுந்து சுண்ணாம்பு சந்தனம் பூசப்பட்ட தாமிரத் தவலையில் நீர் நிரப்பி ஒரு பெரிய குடும்பத்திற்கே
வெந்நீர் போட்டு தயாராக நகச் சூட்டிற்கு விளாவி பலிகடா போல் இழுத்துவரப்படும் அடம்பிடிக்கும் சிறுவர்களை சிறுமியர்களை பக்குவமாய் சமாதானப் படுத்தி காலைக் கடன்களை பெயருக்கு
முடிக்க வைத்து, ஒரு கோமணத்தில் நிற்க வைத்து ,குளிரில் நடுங்கும் அவர்கள் தலையில் இருட்டு மூலைகளில் அம்மா என்ற பெரியவர்
முதல் எண்ணெய்க் கை வைத்துத் தேய்த்து விட ,ஒரு வழியாக வயது வரிசைப்படி சிறியோர் முதல் பெரியவர் எனக் குளித்து
நன்றாகத் தலை துவட்டி ,புத்தாடையை சந்தனம் குங்குமம் தடவி அப்பா ஆசி தந்து தர ,நெற்றிக்கு இட்டுக்கொண்டு அதை அணிந்தபின் ஒவ்வொருவராய் அப்பா அம்மா காலில் வீழ்ந்து வணங்க ...
நினைவெல்லாம் பட்டாசு மீதாகி ஊதுபத்தியுடன் வாசலுக்கும் கொல்லைக்குமாய் தொந்தரவாய் அலைய ,வாசல் இருட்டில் ஊதுபத்தியின் நெருப்புக் கண் தெரியாது திண்டாட .தீபச் சுடரை அடிக்கடி கம்பி மத்தாப்புவால் அணைத்துவிட -
ஏதோ கலவரம்போல் ஒரே சத்தமாய் வெடிகளை விட ஓசையிட ..
வெளிச்சம் வந்தவுடன் பட்டாசும் குறைந்துபோக தீபாவளியின் ஓர் மாத எதிர்பார்ப்பு சட்டெனச் சப் என்று ஆகிவிடும் .
அம்மா தான் பாவம் கடைசியில் குளித்து மறுபடி மடிப் புடவையுடன் புகைக்குள் புதைந்து இட்லி ,பஜ்ஜி ,பாயாசம் இவைகள் செய்யச் செல்வார்.
அப்பா பூஜையில் அமர சாஸ்திரத்திற்கு அம்மா அக்காக்கள் கம்பி மத்தாப்பூ மட்டும் ஏற்ற ,
புடவைகளில் அவர்கள் சரசரக்க ,சிறுவர்களோ புதியதை எல்லாம் வெடி மருந்துக் கறுப்புக் கரையாக்கிட --
யார் இன்று முதல் வெடி போட்டது என்ற சர்ச்சையில் வீதிச் சிறுவர்கள் வாதிட -
ஏழைச் சிறுவர்கள் ஒவ்வொருவர் வீட்டின் முன்பும் குழுமி நின்று அரைகுறைப் பட்டாசுகளைப் பொறுக்கிச் செல்ல--
8 மணிக்கு அம்மா எல்லாவற்றையும் செய்து வைத்து சாப்பிட அழைத்தால், 'பசிக்கலை ' என்று திமிறி ஓட-
வாயில் திணிக்காத குறையாக சாப்பிட்டு விட்டு உடன் இஞ்சி லேகியம் தின்ன வேண்டும் .
அம்மா புதுப் புடவை கட்டும்போது தீபாவளியே ஓய்வு எடுத்திருக்கும்
&
இது என் அம்மாவை நினைந்து எழுதப்பட்டது .
எனினும் இத்தகைய அம்மாக்கள் நினைந்தும் அவர்களைப் போற்றி எழுதப்பட்டது இந்நெடிய கட்டுரை.
---சந்திர கலாதர்
12.11.2012 / திங்கள் / ஐப்பசி 27






