Tuesday, June 28, 2011

When Migratory Birds Grace The Skies !

நீர்ப்பறவைகள் வானில் நீந்துகையில் ..!


பூர்ணிமை நிலவு ...
கீழைத் தொடுவானில் பூத்துவிட்டது--
குளிர்ப்பொழுது;
நிலவுப்பூ மலரும் வேளையில் கண்டு களிக்கும் பாக்கியம்
கிட்டவில்லையே ! .
சற்று நேரம் தாழ்த்திவிட்டேனே !
முகிற்கூட்டங்கள் குழுமி நின்று நிலவின் மணம் நுகர்ந்து மெய்மறந்து நிற்பனவோ ?
அணியணியாய் நீர்ப்பறவைகள் மாலை அந்தி வேளைகளில்
வானில் மிதந்து நீந்திச் செல்கின்றன --
நீர்நிலைகளை நாடி நிலம்விட்டு வான் எழும்பி ஒழுங்காய் ,அமைதியாய்ச் செல்கின்றன இதோ கரும் கொக்கினங்கள் --
இறைவா ! இப்பறவைகளைத்தான் எவ்வளவு அழகாக நீ படைத்துவிட்டனை !
வான்வெளிக்கே அழகு ஊட்டிக்கொண்டு அவை பறந்து செல்கையில் என் உள்ளம் எவ்வளவு பாடுபடுகிறது ?
ஏன் அங்குப் புரியாததொரு வேதனை வந்து புகல் வேண்டும்?
அடுத்த பிறவியில் என்னை இப்பறவைகளில் ஒன்றாய்ப் படைத்துவிடு--
இதயம் மகிழப் பறந்து ..ஆசைதீரப் பாடி வாழ்வை நுகர வேண்டும்-- கடற்பரப்பில் முன்னேறிவரும் நீள் அலைகள்போல் ....
ஆனால் சற்றும் ஓலமின்றி ..
புல்வெளியில் வளைந்து வளைந்து செல்லும் கருநாகப் பாம்பின் நெளிவு அசைவுகள் போல் பல நெளிவுகள் ஒடியாத தொடர்வாகப் பெற்று ...
ஆனால்,மிகத் தெய்வீகமாய் ...
எங்கோ பறந்து செல்லும் அவைகளைக் காணுறும்போதெல்லாம் ,
என் உள்ளம் எனை நீங்கி அவற்றைத் தொடர்ந்து செல்கின்றன !
என் பார்வையால் அவைகளைத் தொடர்ந்து செல்ல இயலவில்லை என்பதை உணர்கையில் இதயம் எவ்வளவு துணுக்குறுகின்றது !

----சந்திர கலாதர்            
           

No comments:

Post a Comment