நியாயம் தானா இது ?
&&
இதில் நாம் என்றோ நீங்கள் என்றோ குறிப்பிட்டால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் . ஆனால் இது எல்லோருக்குமே பொருந்தும் .
இருப்பினும் இங்கு நான் என்றே குறிப்பிட்டு கொள்கிறேன் --
&&&
நான் என்றோ மனம் இசைகையில் உடற்பயிற்சியோ அன்றி யோகாசனமோ கால் மணியோ/அரைமணியோ செய்துவிட்டு நாலு பேர் மத்தியில் தினமும் ஒரு இரண்டு மணி நேரமாவது விடாமல் நான் ஆசனம் செய்கிறேன் என்று கூசாமல்
கர்வமாய்ப் பீற்றிக் கொள்கிறேன்--
"உனக்கு மனச்சாட்சியே கிடையாதா? "--என்னுள் குரல் கேட்கிறது
என்றோ ஒரு நாள் ஓர் கை ஏந்தி நிற்கும் வயோதிக ஜீவன் ஒன்றுக்கு மிக ஈன நாணயம் தேடித் துருவிப் போட்டு விட்டு நாலு பேரிடைப் பெரிய வள்ளல்போல் பெருமை பேசுகிறேனே --
"அடப் பாவி ! " என்றொரு குரல் அடிவயிற்று ஆழத்திலிருந்து எழுகிறது .
ஆண்டுத் துவக்கத்தில் அலுவலகத்தில் எந்த நிறுவனத்தான் நாட்காட்டியோ,நாட்குறிப்பேடோ, அன்புப் பரிசோ அளிக்கமாட்டனா என நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு பின்னாலேயே அலைந்து திரிந்து விட்டு ,நாலு பேரிடைக் கையூட்டுக் கொடுமை பற்றி வாய் கிழியப் பேசுகையில் --
" நீயெல்லாம் உருப்படுவாயாடா ! " என என்னுள் காது கிழியச் சத்தம் கேட்கிறதே!
எளிய வாழ்வும் நடைமுறைகளையும் பற்றி காந்தி மகான் போல் போதனை செய்து வேஷமிட்டபடியே ஆடம்பர அலங்காரக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ' பளிச் பளிச் 'க்களில் ' பட்டும் பொன்னும் 'போட்டிபோட , நான் என் வீட்டிலேயே அரங்கேற்றுகையில் -
" என்ன வஞ்சகனடா நீ ! வெட்கமாயில்லை ? "என என்னுள் ஒன்று பொருமுகிறதே--
பேருந்துகளில் துண்டுபோடுவதுபோல் கூட்ட நெரிசலில் என் குடும்பத்தினருக்கு இடம் பிடித்துவிட்டு ,"இந்த ஜனங்க திருந்தவே மாட்டாங்க ! " என்று தான் இம்முயற்சியில் தோற்கையில் நீதி புலம்புகையில் --
" ஹாஹாஹ்ஹாஹா ! " என்று வாயொலியோடு கை ஒலியும் கேட்கிறதே!
அப்போது என் தலையும் குனிகிறதே !
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment