உதிரும் உறவுகள் ! நட்புகள் !
&
இந்த உறவுகள் இந்த நட்புகள்
ஓ ..எத்தனை வினோதங்கள் !
ஒன்றொன்றாய் உதிர்வதும்
ஒன்றொன்றாய் தளிர்த்தலும் -
கழுத்திலே அரைவைக்கல் என
எண்ணி விலகியது எல்லாம்
எப்படியோ கட்டி உறவாடுவதும் --
காலம் எல்லாம் கட்டியம் எனத்
தேர்ந்து ஒட்டியது எல்லாம்
பனிக்கட்டியாய் உருகி மறைவதும் --
இதற்கும் காரணம் புரியாது
அதற்கும் நோக்கம் அறியாது ---
ஒரு பார்வையின் கோணல்
ஒரு சொல்லின் முட்கள்
ஒரு செயலின் சிறு அந்நியம்
ஒரு புரிதலின் இடறல்--
உதிர்தலின் உரமாய்
எதுவோ ஒன்று இருக்கலாகுமோ ?
ஒரு பார்வையின் பரவசம்
ஒரு சொல்லின் கனிவு
ஒரு செயலின் அண்மை
ஒரு புரிதலின் நேர்மை --
தளிர்த்தலின் தாயாய்
எதுவோ ஒன்று இருக்கலாகுமோ ?
கல்லூரி வாழ்வின் கடைசி நாட்களில்
கண்ணீர் மல்க அலைந்து திரிந்து
ஒரு குறு ஏட்டில் பெற்ற வாசகங்கள்
பிரித்துப் படிக்கையில் இடித்துச் சொன்னது--
"நொடிகளின் சத்தியம் மடிவது இயல்பே !
தன்னை மலர்த்திய உறவுகள் எல்லாம்
தன்னில் மலர்ந்த உறவில் அழியும் ! "--
வாழ்க்கை உணர்த்திய பாடம் இதுவே!
-----சந்திர கலாதர்
No comments:
Post a Comment