Saturday, July 16, 2011

a tale of sorrow

ஒரு துன்ப கீதம் ....
பரவசமாய்க் காற்றில்ஆடி மகிழும் ஓர் கொடுக்காப்புளி மரம் --
அதன் ஓர் கிளை நுனியில் ஊசலாடும் ஓர் சிறு கூடு ..
இரு குரூரமான விழிகள் கூட்டை நெருங்குகின்றன ;
இரக்கமில்லா அவற்றின் அரக்கப் பார்வை கூட்டின்மேற் குவிந்து உறைகின்றது -
பார்வை பறை சாற்றுகின்றது கொடும் எண்ணங்களை --
வஞ்சக விழிகள் விரிந்து கூட்டை நெருங்குகின்றன ;
கூட்டினுள் பார்வையை ஈட்டியாய்ச் செருகுகின்றன-
என்ன கொடுமை இது !
தாய்தந்தைப் பறவைகள் இல்லாதவேளையில் -
கள்ளமற்ற பிஞ்சு இதயங்கள் அச்சத்தில் அருவியாய் அரற்றுகின்றன --
தரையில் எறிந்த மீனாய் நான் துடிக்கின்றேன் -
கொடிய கருவிழிகள் இங்கும் அங்குமாய்ச் சுழல்கின்றன -
அப்பாடா...!
ஓர் நொடி ஊர்கிறது விழிகளின் புரியாத தயக்கத்தில்-
சே .! என்ன நொடி அது !
வஞ்சக விரல்கள் கூம்புகின்றன இடுக்கியாய்-
குஞ்சுகளை வெளியே இழுக்க முயல்கின்றன -
கொடிய உதடுகளோ தாய்ப்பறவையின் மொழி பேசுகின்றன -
பாவிக் கரங்கள் கூட்டினைத் தலைகீழாய்க் கவிழ்த்துக் காலி செய்ய முயல்கின்றன --
முயற்சி தோல்வியடைகிறது -
கரங்கள் பின்வாங்குகின்றன -
ஓர் பெருமூச்சு .." ஓ " !
இதுவரை என்னை அழுத்திக் கொண்டிருந்ததே..அது அடிவயிற்றினின்று விடுதலை பெறுகின்றது !
" கடவுளே ! உனக்கு நன்றி !..அல்ல.அல்ல -
என் நன்றியைத் திருப்பிக் கொடுத்துவிடு ! "-
அதே கரங்கள் மிகுந்த உறுதியுடன் மறுபடி கூட்டை நெருங்குகின்றனவே --
எளிய குஞ்சுகள் உடும்பெனக் கூட்டினுள் ஒட்டிக் கொள்கின்றன -
பரிதாபமாக ஓலமிட்டுக் கரைகின்றன ..கதறி அழுகின்றன !
அந்தோ! தங்கம் கவர்ந்திடத் தளிர்நடைக் குழந்தையின் கழுத்தையே முறிக்கும் மனத்தினன்முன்
வீறிடும் கதறல்கள் என்ன செய்யக் கூடும் ?
கொடிய கரங்கள் கூட்டினைப் பிசாசுபோல் உலுக்குகின்றன ..ஆட்டிக் கலைக்கின்றன -
எனினும் வெற்றி பெறவில்லை -
ஐயோ ..கூடு முழுவதும் கதறல் ஒலி...ஒப்பாரி...ஓலம் !
கதறல்கள் பொங்கும் வெள்ளமாகி எட்டுத் திக்கும் பாய்ந்தோடுகின்றது-
செவிகளில் அலை மோதுகின்றது -
எனினும் யாது செய்வேன் யான் ?
இந்தக் கரங்களின் உரிமையாளன் வலிவு கொண்டவன் -
அன்புச் சொற்களுக்குச் சொற்கதவம் சாத்திவிட்டவன் ;
கருணை கண்டிடாக் குருடன் ..இத்தோட்டமோ இவன் உடைமை --
இப்பொழுது கூட்டின் முடிச்சவிழ்க்கிறான் -
இரு குஞ்சுகளோடு கூட்டினையே இந்த ராவணன் தூக்கிச் செல்கிறான் -
ஓலமிடும் கூட்டோடு மறைந்து விடுகிறான் --
பாவி...! அந்தக் கூட்டிற்குள் என்ன இருக்கும் என்று கவர்ந்து செல்கிறாய் ?
அந்தக் குஞ்சுகள்தான் எப்போதோ ஓலமாய்த் தேய்ந்து ,கண்ணீராய்க் கரைந்து
பய வெம்மையில் ஆவியாகிப் போயிருக்குமே !
" அழுகுரல் எழுப்பும் சிறு குஞ்சுகாள் ! மென் நெஞ்சங்காள் !
சிறகு முளையாச் சிறு இதயங்காள் !
சிறுபோழ்தில் சிறகு முளைத்திடும் உங்கள் உயிர்களுக்கு ,உடல் அவனுள் சமாதி பெருங்கால்- .. ..
ஆண்டவனைக் கெஞ்சித் துதியுங்கள் -
வேண்டாம்..வேண்டவே வேண்டாம் !
அவனை நினைக்கவே வேண்டாம் ..சற்றும் நினையாதீர் அக்கொடியோனை !
எவன் சொன்னான் அவன் எளியோரைக் காப்பான் என்று ?..பொய்.-
எவன் புகன்றான் முறையீடுகளுக்குக் கடவுள் செவி சாய்க்கிறான் என்று ?-பொய் !
அவன் செவியிற் பறை இல்லை !
எவன் மொழிந்தான் அவன் பலசாலி என்று ?--பொய் !
இக்கொடும் மானுடனையே அவனால் வீழ்த்த முடியவில்லையே ?
அழுவதால் ஆய பயன் என்ன? அவன்தான் சென்று விட்டனனே !
குஞ்சுகாள் ! உங்கள் அழுகையின் ஆழம் அவன் மகிழ்வின் ஆரவாரமகின்றதே !
ஆனால் .....
நான் நிற்கிறேன் வாய்மூடி மௌனியாய் இன்னும் இதயம் கசக்கிப் பிழியும்
காட்சிகள் காண்பதற்கே --
[தொடரும் பகுதி-2 ]
----சந்திர கலாதர்

No comments:

Post a Comment