Saturday, July 16, 2011

a tale of sorrow

ஒரு துன்ப கீதம் ..
[ பகுதி-- 2 ]
இதோ ! தாய்ச் சிட்டு மின்னல் அருகில் உள்ள மரக்கிளையில் இறங்குகிறது --
மின்னலை இடி தொடரவேண்டும் அன்றோ ?
அலகிடை உணவுடன் தன குஞ்சுகளை ஆர்வத்தோடு அழைக்கின்றது--
பதில் இல்லை --என்ன வேடிக்கையாய் உள்ளதே -
பறந்து விட்டனவோ ...? சிறகுகள்தான் முளைக்கவே இல்லையே ..!
வேடிக்கை காட்டுகின்றனவோ .!மறுபடி தாய் செல்லமாகக் கொஞ்சி அழைக்கிறது -
' கீ....கீ..கீ ! '
............!
என்ன..!
நிலவும் மயான அமைதி ஆயிரம் குரல் கொண்டு பேசுகின்றது !
ஏதோ தீங்கு ஏற்பட்டிருக்க வேண்டும்--
நம்பிக்கை சற்று இழந்த கலவரத்தில் ..' கீ..கீ..கீ..கீகீகீ ! '
' .......! '
மனம் பதை பதைக்கின்றது--
உடன் தன் கூடிருந்த கிளைக்குத் தாவி மறுபடி கூவுகின்றது -
பதிலே இல்லை ....எங்கிருந்து தாயே வரும் ?
சிறகுகளில் கவலை முளைக்கின்றது -
கூடு இருந்த இடத்திற்கு நேராக வருகின்றது -
ஒன்றும் இல்லை ...கூட்டியே காணோம் !
"என் கூடு எங்கே ? என் அருமைச் செல்வங்கள் எங்கே ?
எவர் கவர்ந்தார் என் பிஞ்சுக் குழந்தைகளை ? "-என்று
தாய் கதறுகின்றது ..வீழ்கின்றது ...உருளுகின்றது -
இங்கு பறக்கின்றது ...அங்கு ஓடுகின்றது ..கிறீச்சிடுகின்றது....புலம்புகின்றது -
கத்தித் துடிக்கின்றது -
'கீ.கீ..கீ ..கீகீகீகீ ! '--என்று குரல் கொடுத்துக் கூர் செவியாய்ப் பதிலுக்கு ஏங்குகின்றது --
அமைதி...அமைதி...அமைதி !
தாய் நெஞ்சிலோ துயரம் ,கலவரம்,சோகம் ,துக்கம்-
மற்றக் கிளைகளைச் சுற்றி வருகிறது ..
உயர்ந்த கிளைகள் ,தாழ்ந்த கிளைகள் ...இந்தக் கிளைகள்,அந்தக் கிளைகள் -
மூலை முடுக்குகள் ..எல்லாவற்றிலும் சுற்றியலைந்து
குரல் கொடுத்தபடியே தேடுகின்றது -
சிறகுகள் துன்பத்தில் துடிதுடித்துப் படபடக்கின்றன -
தடையின்றிச் சோக கீதம் பீறிட்டுப் பொங்கி வெளி ஏகுகின்றது--
ஓலைக் கோடரி இதயத்தைப் பிளக்கின்றது --
இரைகொண்ட அலகுடன் தந்தைச் சிட்டும் இப்பொழுது வந்து இறங்குகின்றது -
ஒருபுறம் வியப்பு ....மறுபுறம் துயரம் இரண்டிலுமே மாறி மாறி விழுந்து தவிக்கின்றது -
இரு சிட்டுகளும் அரற்றியபடியே சோலை எங்கணும் சல்லடை போட்டுத் தேடுகின்றன -
தன் கூடு இருந்த கிளையைத் தாய்ச்சிட்டு அயர்வே இல்லாமல் சுற்றிச் சுற்றி --
நம்பிக்கை இழப்பதுவும் பெறுவதுவும் வட்டமிடுகின்றது -
எவரால் மடை இறக்கமுடியும் அத்தாய் அன்பிற்கு ?
தன் குழந்தைகள் அங்கில்லை என்பது நன்கு தெரிந்த பின்னும்கூட --
ஓர் அற்ப ....மிகமிக அற்ப ஆசையில் அக்கிளையைச் சுற்றிச் சுற்றி சுழல்கின்றது --
முடிவற்ற வட்டங்கள் ! ஒன்றில் ஒன்றாய்ச் சிக்கும் வட்டச் சுழல்கள் !
சிறகுகளில் ஜனிக்கும் ' விர்..ர் ' அம்புகள் இதயத்தைத் துளைக்கின்றன -
துயர வட்டங்களில் சோக ராகங்கள் தேம்பித் தேம்பி அழுகின்றன !
என் இதயமோ நாவின் விளிம்பில் தத்தளிக்கின்றது-
உதடுகளின் தொடு வானங்களில் சொற்கார்மேகங்கள் குவிகின்றன -
விழிக் கருமைகளில் ஆவல் மின்னல்கள் பளீரிடுகின்றன -
ஏக்கப் புயல்கள் நாசியிற் சீறுகின்றன -
நடந்தவற்றை எல்லாம் சொல்லித் தீர்த்திட மனம் துடிதுடிக்கின்றது-
வார்த்தைகள் உதடுகள் மீது நெருக்கமாக நர்த்தனம் புரிகின்றன -
சொற்கள் கொப்பளிக்கின்றன !
ஒ.....எனக்கு மட்டும் சிட்டுமொழி தெரிந்திருப்பின் ..!
அந்தோ,.! மானுடன் நான் எப்படிப் பகர்வேன் !
மொழி புரியாததால் ...என்னையே கொலைகாரன் எனக் கருதிவிடின் ..?
சரி..என்ன தேறுதல் சொல்வேன் ?
அந்திவேளை--
இவைகளின் துன்பத்தைப் பற்றி ஓர் சிறிதும் கவலை கொள்ளவில்லை -
தன் வாலில் இரவை இழுத்துக் கொண்டு மெல்ல வருகின்றது !
ஆனால்.....இவை தேடுவதோ முடிவு பெறவில்லை -
வந்தும் போயும் கதறியபடி அலைகின்றன -
இது எப்பொழுது முடியும் ?
துன்பம் தாளாத நான் குற்றவாளியைப் பின் ஏகுகிறேன்--
பார்த்த குற்றத்துக்காக நலிகிறேன்-
சோகத்தால் களைத்த ஏழை நெஞ்சங்களைத் தனியே தவிக்க விட்டுவிட்டு
சுமையான இதயம் தாங்கி வீடுநோக்கி நடை போடுகிறேன் --
கால மருத்துவனே ! விரைந்து நீ சோலை செல்--
ஆறாத காயத்திற்கு மென்மையாய் மறதி இடுவாய் !
---------சந்திர கலாதர்

a tale of sorrow

ஒரு துன்ப கீதம் ....
பரவசமாய்க் காற்றில்ஆடி மகிழும் ஓர் கொடுக்காப்புளி மரம் --
அதன் ஓர் கிளை நுனியில் ஊசலாடும் ஓர் சிறு கூடு ..
இரு குரூரமான விழிகள் கூட்டை நெருங்குகின்றன ;
இரக்கமில்லா அவற்றின் அரக்கப் பார்வை கூட்டின்மேற் குவிந்து உறைகின்றது -
பார்வை பறை சாற்றுகின்றது கொடும் எண்ணங்களை --
வஞ்சக விழிகள் விரிந்து கூட்டை நெருங்குகின்றன ;
கூட்டினுள் பார்வையை ஈட்டியாய்ச் செருகுகின்றன-
என்ன கொடுமை இது !
தாய்தந்தைப் பறவைகள் இல்லாதவேளையில் -
கள்ளமற்ற பிஞ்சு இதயங்கள் அச்சத்தில் அருவியாய் அரற்றுகின்றன --
தரையில் எறிந்த மீனாய் நான் துடிக்கின்றேன் -
கொடிய கருவிழிகள் இங்கும் அங்குமாய்ச் சுழல்கின்றன -
அப்பாடா...!
ஓர் நொடி ஊர்கிறது விழிகளின் புரியாத தயக்கத்தில்-
சே .! என்ன நொடி அது !
வஞ்சக விரல்கள் கூம்புகின்றன இடுக்கியாய்-
குஞ்சுகளை வெளியே இழுக்க முயல்கின்றன -
கொடிய உதடுகளோ தாய்ப்பறவையின் மொழி பேசுகின்றன -
பாவிக் கரங்கள் கூட்டினைத் தலைகீழாய்க் கவிழ்த்துக் காலி செய்ய முயல்கின்றன --
முயற்சி தோல்வியடைகிறது -
கரங்கள் பின்வாங்குகின்றன -
ஓர் பெருமூச்சு .." ஓ " !
இதுவரை என்னை அழுத்திக் கொண்டிருந்ததே..அது அடிவயிற்றினின்று விடுதலை பெறுகின்றது !
" கடவுளே ! உனக்கு நன்றி !..அல்ல.அல்ல -
என் நன்றியைத் திருப்பிக் கொடுத்துவிடு ! "-
அதே கரங்கள் மிகுந்த உறுதியுடன் மறுபடி கூட்டை நெருங்குகின்றனவே --
எளிய குஞ்சுகள் உடும்பெனக் கூட்டினுள் ஒட்டிக் கொள்கின்றன -
பரிதாபமாக ஓலமிட்டுக் கரைகின்றன ..கதறி அழுகின்றன !
அந்தோ! தங்கம் கவர்ந்திடத் தளிர்நடைக் குழந்தையின் கழுத்தையே முறிக்கும் மனத்தினன்முன்
வீறிடும் கதறல்கள் என்ன செய்யக் கூடும் ?
கொடிய கரங்கள் கூட்டினைப் பிசாசுபோல் உலுக்குகின்றன ..ஆட்டிக் கலைக்கின்றன -
எனினும் வெற்றி பெறவில்லை -
ஐயோ ..கூடு முழுவதும் கதறல் ஒலி...ஒப்பாரி...ஓலம் !
கதறல்கள் பொங்கும் வெள்ளமாகி எட்டுத் திக்கும் பாய்ந்தோடுகின்றது-
செவிகளில் அலை மோதுகின்றது -
எனினும் யாது செய்வேன் யான் ?
இந்தக் கரங்களின் உரிமையாளன் வலிவு கொண்டவன் -
அன்புச் சொற்களுக்குச் சொற்கதவம் சாத்திவிட்டவன் ;
கருணை கண்டிடாக் குருடன் ..இத்தோட்டமோ இவன் உடைமை --
இப்பொழுது கூட்டின் முடிச்சவிழ்க்கிறான் -
இரு குஞ்சுகளோடு கூட்டினையே இந்த ராவணன் தூக்கிச் செல்கிறான் -
ஓலமிடும் கூட்டோடு மறைந்து விடுகிறான் --
பாவி...! அந்தக் கூட்டிற்குள் என்ன இருக்கும் என்று கவர்ந்து செல்கிறாய் ?
அந்தக் குஞ்சுகள்தான் எப்போதோ ஓலமாய்த் தேய்ந்து ,கண்ணீராய்க் கரைந்து
பய வெம்மையில் ஆவியாகிப் போயிருக்குமே !
" அழுகுரல் எழுப்பும் சிறு குஞ்சுகாள் ! மென் நெஞ்சங்காள் !
சிறகு முளையாச் சிறு இதயங்காள் !
சிறுபோழ்தில் சிறகு முளைத்திடும் உங்கள் உயிர்களுக்கு ,உடல் அவனுள் சமாதி பெருங்கால்- .. ..
ஆண்டவனைக் கெஞ்சித் துதியுங்கள் -
வேண்டாம்..வேண்டவே வேண்டாம் !
அவனை நினைக்கவே வேண்டாம் ..சற்றும் நினையாதீர் அக்கொடியோனை !
எவன் சொன்னான் அவன் எளியோரைக் காப்பான் என்று ?..பொய்.-
எவன் புகன்றான் முறையீடுகளுக்குக் கடவுள் செவி சாய்க்கிறான் என்று ?-பொய் !
அவன் செவியிற் பறை இல்லை !
எவன் மொழிந்தான் அவன் பலசாலி என்று ?--பொய் !
இக்கொடும் மானுடனையே அவனால் வீழ்த்த முடியவில்லையே ?
அழுவதால் ஆய பயன் என்ன? அவன்தான் சென்று விட்டனனே !
குஞ்சுகாள் ! உங்கள் அழுகையின் ஆழம் அவன் மகிழ்வின் ஆரவாரமகின்றதே !
ஆனால் .....
நான் நிற்கிறேன் வாய்மூடி மௌனியாய் இன்னும் இதயம் கசக்கிப் பிழியும்
காட்சிகள் காண்பதற்கே --
[தொடரும் பகுதி-2 ]
----சந்திர கலாதர்

Saturday, July 2, 2011

Long Not For Appreciation....Proceed On Undeflected !

பாராட்டு ஏங்காதே ! உன் வழி செல் ...
உலகத்தின் மதிப்பீட்டை எதிர்நோக்குகிறாயா..
என் நண்பனே !
நிச்சயம் நீ மூடன் !
சற்றும் பொருட்படுத்தாதே --
கெஞ்சியும் கால்பிடிக்காதே !
கெஞ்சக் கெஞ்சக்
கடிகளே பெறுவாய் --
இகழ்ச்சி எக்காளமிடும் விழிகள்
உனைப் பார்த்துக் கொக்கரிக்கும்--
உன் பாதை எல்லாம்
வசைமொழிகள் விதைத்திருக்கும்--
ஏன் தெரியுமா ..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
எனவேதான் சொல்கிறேன் --
நண்பனே ! நண்பனே !
அந்த அழகிய யாழினை
உன் கரங்கள் அணைத்திடு ;
அதன் ஒளிர் நுண் நரம்புகளில்
உன் உள்ளே இசைக்கும்
உணர்ச்சிகளின் ஸ்ருதிகளை
இசைவாகப் பாயவிடு --
ஆம் ..அந்தத் தேனினும் இனிய..தெய்வீக..
ஆன்மா கனியவிடும் கீதங்களின்
உயர்வு தாழ்வு ஆழங்களுக்கேற்ப
ராகப் பாலங்கள் இடு.
இசை வீதிகள் இயற்று --
உனது இசை நாதங்கள்
மரத்த செவி மந்த உலகினரால்
நுகர்வதற்கு அப்பாற்பட்டவை
என்பது உணர் .
&
உள்ளும் புறமுமாய்
இரு த்வனிகளும்
இயற்கையோடு சுந்தரமாய்
இயைந்து பரவட்டும் -
பரவசமூட்டும் உன் கீதங்களால்
உன் பாதைவெளி எல்லாம்
இனிய அதிர்வுகள் திகழட்டும் --
காற்று அணுக்கள்கூட
மென்மையான.. அமைதியான
உன் நாதச் சுவடுகளோடு
இணைந்து ஆடட்டும்.
&
தயங்காதே ! தளராதே !
உன் தனி வழியில்
தொடர்ந்து செல்--
திரும்பாதே உலகை நோக்கி ;
ஏன் எனில்....
உன் தலை குறி வைத்து
கற்கள் அம்பாக்கப்படும் --
ஏன் எனில்..
இது ஒரு கிறுக்கு உலகம் !
&
பளீர் எனப் பிரகாசிக்கும்
உன் அறிவின் முன்பு
கற்பனைக் கிண்ணம் வை--
உன் இதய நிலவின்
இனிய அமுதத்தை
அதனில் ஊற்று --
உன் தியான சக்தியால்
விரைவாகக் கடைந்தெடு --
அதில் சுற்றிச் சுழலும்
ஒளிரும் துளிகளின்
உன்னத மகிழ்வின்
பல்லவியைக் காண்--
உன் கீதங்களில் அதனைக்
கவர்ச்சியாய்க் கட்டு !
&
நல்லவற்றிற்கு இவ்வுலகம்
செவி சாய்ப்பதில்லை --
புது நறுமணம் அதன் நாசியைக்
கிளர்ச்சியுறச் செய்வதில்லை -
தன் சிறகுகளை இறுக்கிக்கொண்டு
பழகிய பழைய தடங்களிலேயே
ஊர்ந்து செல்ல விரும்புகிறது --
எனவே அது ..
உனை ஏற்று ஒரு வார்த்தை
பாராட்டாது இருப்பின்
கண்ணீர் ஒரு துளியும்
சிந்தி நில்லாதே .
&
உன் முயற்சிகளில்
சற்றும் தளராதே --
உன் யாழ் நரம்புகள்
சற்றே தளர்ந்து விட்டதா ?
உடன் முறுக்கேற்று --
விரைவாய் அதை மீட்டு ;
நரம்புகள் உன்னைப் பேசட்டும் !
மீதமுள்ள உன் வாழ்வுக் கோப்பை
கீதங்களால் நிரம்பி வழியட்டும் -
வாழ்வை முழுதாய் அனுபவி.
&
சிற்றுளியை எடு ;
கூர் செய் --
உன் சிறு உடம்பின் முன்
அமைதியும் கம்பீரமுமாய்
நிமிர்ந்து நிற்கும்
உயர் மலையைப் பார்--
இரவு பகலென அயர்வின்றி
அற்புதச் சிலைகளை
அழகாய் வடிவமை ;
சோர்வடையாதே --
தளர்ந்த நரம்புகளுக்கு
கற்பனை அமுதூட்டு--
&
இன்றிரவே ..
உன் சிறு படகைக் கட்டு--
கரைமீது இழுத்து வா ;
அன்பான அலைகள் அழைக்கையில்
கவிப் பேரானந்த மாக்கடலுள்
தள்ளி ஏறிவிடு-
உன் சிறு துடுப்புகளை
விரைவாக இயக்கு --
கடலுள் வெகு தொலைவு
முன்னேறிச் செல் --
இம் மணற்பரப்பைப்
பொருட்படுத்தாதே--
பொங்கும் மாக்கடலே
உன் உலகம் !
உன் கீதங்கள்
உல்லாச அலைகளின் பாடல்களே !
&
நீல மெத்தைக் கடலுள்
உன் பார்வை பாயட்டும் --
உன் விழிகள் எட்டிப் பிடிப்பது
அனைத்தும் படித்தறி--
இக்கரைச் சிந்தனையே இன்றிப்
புத்துலகங்கள்
புது மகிழ்வுகள்
புதுப் புகழ்கள் --
இவை நாடி அயராது துடுப்பிடு !
கரை திரும்பாதே -
ஏன் எனில்...
உன் சிறு படகைக்
கவிழ்க்கத் தயாராய்
யாராவது நிற்கக் காண்பாய் .
&
இரவின் ஸ்படிக அமைதியில்
தியானித்திரு --
மென்பனி பூசும்
இளம்காலைப் புத்துணர்வில்
மனம் வசம் செய் --
மாலைப் பொன் கனிவில்
கண் திறந்து
மனம் கூர் செய்--
உனது வேலைகளை
கூடாரமிடு --
ஏளன விழிகளுக்கு
உணவாகாதே !
எழுச்சி கனிவு எண்ணங்கள்
வற்றாது உன்னில் சுரந்து
உன் உறுதிப் பேனாமுனை கசிந்து
சாதனைகள் புரியட்டும் --
உன் நதியின் ஜீவன்
வற்றிப்போக விடாதே !
&
உணர்ச்சிமயமான உன் இதயத்தின்
பொறுமையான படைப்புகளைப்
படிக்கிறார்களா என நீ
வேவு பார்க்காதே --
அது உன்னை அரிக்கும் ;
கவலை சேர்க்காதே --
தொடர்ந்து தொடர்ச்சியாய் எழுதுவதே
தலையாய கடமை என்று கொள்.
உன் எழுத்துக்கள் கம்பீரமாய்
முகத்துக்கு முகம் காட்டி
உயரிய சிகரங்களை எதிர் காணட்டும் !
&
உறங்கும் உலகம்
விழித்திடும் முன்
சீறிப் பொங்கும் இதயத்தின்
வெள்ளம் அனைத்தையும்
கவிதை ஆற்றில் பாயவிடு !
அனைத்திற்கும்
அழகிய வடிவம் ..
நெடிய உயிர் ..
குன்றா ஒளி ..
வனப்புச் சிறகுகள் ..
அமைத்துக் கொடு --
அவற்றை எல்லாம்
தங்கக் காலையின்
எழிலார் வானில்
விடுதலை செய் !
&
அவை எல்லாம்
வண்ணச் சிறகுகள் படபடக்க
ஆனந்தச் சிலிர்ப்பில்
மத்தாப்புச் சிதறலாகட்டும்!
ஆன்மா பரவசப்படுத்தும் பாடல்களை
இதயம் திறந்து கூவட்டும் !
விண்ணில் ஏறித்
தொடுவானுள் தாழ்கையில்
செல்லும் திக்கெட்டும்
உன் படைப்பின்
மென் நறுமணம் தெளிக்கட்டும் --
&
அதுகாறும் நண்பனே !
மெய் வருத்தம் பாராய் !
கண் துஞ்சாய் !
-----சந்திர கலாதர்

Friday, July 1, 2011

IT IS UNBELIEVABLE !

நம்ப முடியவில்லை !
             
                  &

இளங்காலைக்  காற்றில்
வேப்ப மரத்தடியில்
இனிமையாய்ப்   புரண்டிட
இமை இறக்குகையில் --

எதிர் வீட்டுச் சிறுவன்
பதற்றமுடன் எழுப்புகிறான் --
" ராஜீவ் காந்தி செத்து விட்டார் !
நேத்து ராத்திரி ஸ்ரீ பெரும்பூதூரில்
பத்தரை மணிக்குக் கொலையுண்டார் ! "

நம்பவில்லை--
நம்பத்தான் கூடுமோ ?
சிறுவன் சிதறிய சேதியைச்
சிரிப்பில் எற்றித் தள்ளுகிறேன் --

"யாரிடமடா ஏமாற்று வேலை ?
நூல் சுற்றுகிறாயா ? "
" உண்மை! உண்மை !" என
விழிகள் பதறுகையில்
விழி ஓரங்களில்
உதட்டு அசைவுகளில் 
விஷமங்கள் தேடித் திரிகிறேன்  !

 "தமிழ் நாட்டிலாவது...
அதுவும் திருபெரும்பூதூரிலாவது ...
அதிலும் ராஜீவையாவது.
அதுவும் கூடக்   கொல்வதாவது ? 
பூ சூட்டடா
வேறு பெரும் காது பார்த்து..! "

சிறுவன் திகைக்கிறான் -
சொன்னதையே  சொல்கிறான் ;
அவனுக்கே என் சொல்லால்
அவன்மீதே அவநம்பிக்கை -

நிமிடங்கள் நகர்ந்தபடி
மெல்லப் பேசத் துவங்கினவே --
நம்பிக்கை மலை ஒன்றின்
நாடி தளர்கிறது--

தெருவோடும் மௌன நதிதனில்
சிறுசிறு குமிழ்களாகச்
சேதி வெடிக்கையிலே
நம்பாமல் நம்பத் துவங்கி
சோகச் சுழி சிக்கித் தவிக்கின்றேன் !

உண்மையே ! கொடு  நஞ்சே !
நெஞ்சு விழுங்க முடியலையே.---
இதயம் தாளலையே --
இளைஞன் ஒருவனின்
அழகான சரித்திரத்தை
செங்குருதியில் தோய்த்தாயே--.

எளியோரை ஏற்க நினைத்தானை
தாய்மடியில் துண்டு போட்டாயே---.
தேசத் தாய் காக்கக்
கைகேட்டு வந்தானைச்
சிலைத் தாயும் துடித்திடக்
கூறு போட்டது என்ன நீதி ?

கொலைக் கும்பல் இன்று
சிங்களம் இருந்திறங்கி
புலி வேடமிட்டு வீரர் போர்வையிலே
குருதி வெறி கொண்டு
அலைகின்ற தமிழ்க் காட்டினிலே,
வெண்புறாவே  --
அன்பேந்தி மட்டும் ஏன் வந்தாய் ?

தமிழ்நாடே !
தூய உன் சரிதை இன்று
தீக் காயம் கொண்டதுவே..!
இந்திய வரலாற்றில் இன்று
தலைக் குனிவாய்  ஏன் ஆனாய் ?

தாயே !
எவ்வேளைதனில் நீ ஜனித்தாய் ?
எவ்வேளைகளில் இரு மைந்தரையும்
பெற்றளித்தாய் இந்நாட்டிற்கு ?
மூவருமே இயற்கையாய்
இயற்கை எய்திடாது
முழு உடலை இம்மண்ணில்
சரியாது போனதென்ன ?
தேச நலன் கருதி
 செங்குருதிச் சாரல்களைப்
பூமியில் சொரிந்ததென்ன ?

ஏ ..பாதகியே !
கொடியாளே 1
கல் நெஞ்சினளே !
அன்பு முகம் பார்க்க வந்த     
அனைவரையும்  கொன்றாயே --
என்ன செய்தார் அவர் பாவம் ?

ரத்தவெறி கொண்ட
பேடி நாயே --
எவர் பின்னால் ஏவியவர் ?
எவ்விலைக்கு உனை விற்றாய் ?

துப்பாக்கிக் கொலைஞர்களை
விடுதலை வீரராக்கிப்
புலிக் கோடிட்ட தமிழகமே !
நன்றாகத் தலை குனிவாய் ..!

--சந்திர கலாதர்
     [ மே ,1991 ]