ஒரு துன்ப கீதம் ..
[ பகுதி-- 2 ]
இதோ ! தாய்ச் சிட்டு மின்னல் அருகில் உள்ள மரக்கிளையில் இறங்குகிறது --
மின்னலை இடி தொடரவேண்டும் அன்றோ ?
அலகிடை உணவுடன் தன குஞ்சுகளை ஆர்வத்தோடு அழைக்கின்றது--
பதில் இல்லை --என்ன வேடிக்கையாய் உள்ளதே -
பறந்து விட்டனவோ ...? சிறகுகள்தான் முளைக்கவே இல்லையே ..!
வேடிக்கை காட்டுகின்றனவோ .!மறுபடி தாய் செல்லமாகக் கொஞ்சி அழைக்கிறது -
' கீ....கீ..கீ ! '
............!
என்ன..!
நிலவும் மயான அமைதி ஆயிரம் குரல் கொண்டு பேசுகின்றது !
ஏதோ தீங்கு ஏற்பட்டிருக்க வேண்டும்--
நம்பிக்கை சற்று இழந்த கலவரத்தில் ..' கீ..கீ..கீ..கீகீகீ ! '
' .......! '
மனம் பதை பதைக்கின்றது--
உடன் தன் கூடிருந்த கிளைக்குத் தாவி மறுபடி கூவுகின்றது -
பதிலே இல்லை ....எங்கிருந்து தாயே வரும் ?
சிறகுகளில் கவலை முளைக்கின்றது -
கூடு இருந்த இடத்திற்கு நேராக வருகின்றது -
ஒன்றும் இல்லை ...கூட்டியே காணோம் !
"என் கூடு எங்கே ? என் அருமைச் செல்வங்கள் எங்கே ?
எவர் கவர்ந்தார் என் பிஞ்சுக் குழந்தைகளை ? "-என்று
தாய் கதறுகின்றது ..வீழ்கின்றது ...உருளுகின்றது -
இங்கு பறக்கின்றது ...அங்கு ஓடுகின்றது ..கிறீச்சிடுகின்றது....புலம்பு கின்றது -
கத்தித் துடிக்கின்றது -
'கீ.கீ..கீ ..கீகீகீகீ ! '--என்று குரல் கொடுத்துக் கூர் செவியாய்ப் பதிலுக்கு ஏங்குகின்றது --
அமைதி...அமைதி...அமைதி !
தாய் நெஞ்சிலோ துயரம் ,கலவரம்,சோகம் ,துக்கம்-
மற்றக் கிளைகளைச் சுற்றி வருகிறது ..
உயர்ந்த கிளைகள் ,தாழ்ந்த கிளைகள் ...இந்தக் கிளைகள்,அந்தக் கிளைகள் -
மூலை முடுக்குகள் ..எல்லாவற்றிலும் சுற்றியலைந்து
குரல் கொடுத்தபடியே தேடுகின்றது -
சிறகுகள் துன்பத்தில் துடிதுடித்துப் படபடக்கின்றன -
தடையின்றிச் சோக கீதம் பீறிட்டுப் பொங்கி வெளி ஏகுகின்றது--
ஓலைக் கோடரி இதயத்தைப் பிளக்கின்றது --
இரைகொண்ட அலகுடன் தந்தைச் சிட்டும் இப்பொழுது வந்து இறங்குகின்றது -
ஒருபுறம் வியப்பு ....மறுபுறம் துயரம் இரண்டிலுமே மாறி மாறி விழுந்து தவிக்கின்றது -
இரு சிட்டுகளும் அரற்றியபடியே சோலை எங்கணும் சல்லடை போட்டுத் தேடுகின்றன -
தன் கூடு இருந்த கிளையைத் தாய்ச்சிட்டு அயர்வே இல்லாமல் சுற்றிச் சுற்றி --
நம்பிக்கை இழப்பதுவும் பெறுவதுவும் வட்டமிடுகின்றது -
எவரால் மடை இறக்கமுடியும் அத்தாய் அன்பிற்கு ?
தன் குழந்தைகள் அங்கில்லை என்பது நன்கு தெரிந்த பின்னும்கூட --
ஓர் அற்ப ....மிகமிக அற்ப ஆசையில் அக்கிளையைச் சுற்றிச் சுற்றி சுழல்கின்றது --
முடிவற்ற வட்டங்கள் ! ஒன்றில் ஒன்றாய்ச் சிக்கும் வட்டச் சுழல்கள் !
சிறகுகளில் ஜனிக்கும் ' விர்..ர் ' அம்புகள் இதயத்தைத் துளைக்கின்றன -
துயர வட்டங்களில் சோக ராகங்கள் தேம்பித் தேம்பி அழுகின்றன !
என் இதயமோ நாவின் விளிம்பில் தத்தளிக்கின்றது-
உதடுகளின் தொடு வானங்களில் சொற்கார்மேகங்கள் குவிகின்றன -
விழிக் கருமைகளில் ஆவல் மின்னல்கள் பளீரிடுகின்றன -
ஏக்கப் புயல்கள் நாசியிற் சீறுகின்றன -
நடந்தவற்றை எல்லாம் சொல்லித் தீர்த்திட மனம் துடிதுடிக்கின்றது-
வார்த்தைகள் உதடுகள் மீது நெருக்கமாக நர்த்தனம் புரிகின்றன -
சொற்கள் கொப்பளிக்கின்றன !
ஒ.....எனக்கு மட்டும் சிட்டுமொழி தெரிந்திருப்பின் ..!
அந்தோ,.! மானுடன் நான் எப்படிப் பகர்வேன் !
மொழி புரியாததால் ...என்னையே கொலைகாரன் எனக் கருதிவிடின் ..?
சரி..என்ன தேறுதல் சொல்வேன் ?
அந்திவேளை--
இவைகளின் துன்பத்தைப் பற்றி ஓர் சிறிதும் கவலை கொள்ளவில்லை -
தன் வாலில் இரவை இழுத்துக் கொண்டு மெல்ல வருகின்றது !
ஆனால்.....இவை தேடுவதோ முடிவு பெறவில்லை -
வந்தும் போயும் கதறியபடி அலைகின்றன -
இது எப்பொழுது முடியும் ?
துன்பம் தாளாத நான் குற்றவாளியைப் பின் ஏகுகிறேன்--
பார்த்த குற்றத்துக்காக நலிகிறேன்-
சோகத்தால் களைத்த ஏழை நெஞ்சங்களைத் தனியே தவிக்க விட்டுவிட்டு
சுமையான இதயம் தாங்கி வீடுநோக்கி நடை போடுகிறேன் --
கால மருத்துவனே ! விரைந்து நீ சோலை செல்--
ஆறாத காயத்திற்கு மென்மையாய் மறதி இடுவாய் !
---------சந்திர கலாதர்