Thursday, October 13, 2011

SITTING BEFORE AN INFANT

ஒரு பச்சைக் குழந்தையின் முன்
&
நாட்களின் விரைவு நடையில் மாதங்கள் இரண்டு சட்டென ஓடிவிட்டன ;
இரு மடங்கு விரைவாய்க் குழந்தையின் அழகும் வசீகரமும் போட்டிநடை காட்டி இருக்கின்றன ;
கொழுத்த கன்னங்களின் குழிவும் ,சொப்பு வாய் நெகிழ்த்தும் பொக்கைச் சிரிப்பும்
கீழ இமைக்குள் சற்று மூழ்கும் விழி நிறைக்கும் இரு கறு வண்டினமும்
அவற்றின் நக்ஷத்திர ஒளித் தெறிப்புகளும்
இரு சிட்டுக் கால்களையும் ஓர் நேர்த்தியான விரைவில் தன்னுள் இழுத்து
மின்னல் விரைவில் மறுநொடியே வெளி உதைப்பதுவும்
பக்கம் சாய்ந்து ஆழ் தூக்கத்தில் அமிழும் அமைதியும் ..
ஓ ..வார்த்தைகளே ! எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள் ?
எப்படி இந்த அழகை நான் எடுத்துரைப்பேன் ?
தன் கனவு ஒன்றின் மையத்தில் அரைக்கால் சிரிப்பினை உதட்டினில் சுண்டி
மறுநொடி பட்டு இமைகளில் ஒரு இறுக்கம் காட்டி
ஓசையிலா ஓர் அழுகைத் துண்டை விசிறி
மனம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் தாய் அமுதம் விரும்பி
உதடுகளைக் கூட்டி வைத்து உண்மையேபோல் உறிஞ்சி நிறைவதும்
ஒவ்வொரு நொடியும் இறைவன் மட்டுமே அறியக்கூடும் நுண்ணிய வளர்ச்சி பெறுவதும் --
ஓ சுற்றி உள்ளோர் இதயங்களை எல்லாம் மலர வைக்கும் சிறு தேவதையாய்
சில முரட்டுப் பெண் மனங்களிலும்கூடத் தாய்மை உணர்வைப் புரள வைக்கும் அற்புதமாய் ..
&
' மொழியே ! நான் திணறுகிறேன் ; நீ எங்கே? '
'மகனே ! வார்த்தை வேண்டி இக் குழந்தை முன்னேயே நான் தவம் கிடக்கிறேன் ,தெரியலையா !
&
-----சந்திர கலாதர்

No comments:

Post a Comment